சென்னை சொசைட்டி பிரச்சனையில் நம் தொடர் முயற்சியில் ஓர் முன்னேற்றம் !!
August 27, 2022
சென்னை தொலைத்தொடர்பு சொசைட்டி பிரச்சனையில் நம் தொடர் முயற்சியில் ஓர் முன்னேற்றம் – AIBDPA நடவடிக்கை !!
தோழர்களே,
சென்னை தொலைத்தொடர்பு சொசைட்டியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஓய்வு பெற்றோருக்கும் சொசைட்டி கணக்கை முடித்தோருக்கும், இறந்த உறுப்பினர்களுக்கும் சேரவேண்டிய நிலுவைத் தொகை வழங்கப்படாமல் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதனால் சுமார் 6000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். 2 லட்சம் முதல் 6 லட்சம் வரை நிலுவைத்தொகை உள்ளது. இதனை பெற வேண்டும் என்பதற்காக AIBDPA தொடர் முயற்சிகளை எடுத்து வந்திருக்கிறது.
அண்மையில் டெல்லியில் நடைபெற்ற பேரணியின் போது நாம் சென்ட்ரல் கோவாப்பரேட்டிவ் ரெஜிஸ்டர் அவர்களை சந்தித்து மகஜரை கொடுக்க தீர்மானித்திருந்தோம். இதில் சென்னை தொலைபேசியும் நம்மோடு இணைந்து வந்தார்கள்.
23-08-2022 அன்று டெல்லியில் உள்ள அந்த அலுவலகத்திற்கு சென்றோம். அந்த அலுவலகம் லோதி சாலையில் உள்ள NIA அலுவலகத்தோடு இருந்தது. அந்த அலுவலகத்தில் அன்றைக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா கூட்டம் இருந்ததால் உள்ளே வெளியாருக்கு அனுமதி இல்லை. ஆனால் காவல்துறை அதிகாரிகளிடம் நமது பிரச்சினையை கூறிய பிறகு, கூட்டம் முடிந்தவுடன் அனுமதிப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் மாலை 6:00 மணி வரை நாங்கள் காத்திருந்தும் கூட்டம் முடியாததால் எங்களால் பார்க்க முடியாத நிலை.
மாநிலச் செயலாளர் ஆர். ராஜசேகர், மாநில பொருளாளர் தோழர். எஸ். நடராஜா, மாநில உதவி செயலாளர் தோழர். எஸ். அன்புமணி, மாநில சிறப்பு அழைப்பாளர் தோழர். எம். செல்வராஜன் மற்றும் சென்னை தொலைபேசி மாநில செயலர் தோழர் குப்பன், மாநில உதவி செயலர் தோழர் கோவிந்தராஜ் ஆகியோர் சென்றிருந்தோம்.
ஆகவே மறுநாள் 24.08.2022 பேரணி முடித்த பிறகு மீண்டும் நாங்கள் அந்த அலுவலகத்திற்கு சென்றோம். ஊர்வலத்தின் போது கடுமையான வெயில். ஊர்வலம் முடிந்தவுடன் அடாது மழை. எனினும் வந்த காரியத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் நாங்கள் அந்த அலுவலகத்திற்கு சென்றோம். இன்று கெடுபிடி இன்றி நேரடியாக அந்த அலுவலகத்துக்கு செல்ல முடிந்தது. ஆனால் சென்ட்ரல் கோவாப்பரேட்டிவ் ரிஜிஸ்டர் வெளிநாட்டு பயணத்தில் இருந்ததால் நாங்கள் மகஜரை அந்த அலுவலக அதிகாரிகளிடம் சமர்ப்பித்து பிரச்சனையை விளக்கி இருக்கிறோம். அவர்களும் பிரச்சனையின் தாக்கத்தை புரிந்து கொண்டு உயர் அதிகாரியிடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்கள்.
தோழர்களே நாம் எடுத்த முயற்சி சரியான பாதையில் நம்மை கொண்டு செல்லும் என்று நம்புகிறோம்.
நிச்சயமாக கூடிய விரைவில் நல்ல பதில் எதிர்பார்க்கிறோம்.
எனினும் நம்முடைய இடைவிடாத முயற்சிகள் தொடரும்.
நிலுவைத் தொகையை பெறுகின்ற வகையில் நாம் ஓய மாட்டோம் என்று உறுதி கூறுகிறோம் .
0 Comments