22-09-2022ல் மதுரையில் எழுச்சியாக நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டம்
September 23, 2022
22-09-2022ல் மதுரையில் எழுச்சியாக நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டம்
அன்பார்ந்த தோழர்களே ! அனைவருக்கும் வணக்கம்.
22-09-2022 இன்று மதுரையில் உள்ள அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள சுனில் மொய்த்ரா அரங்கில் வைத்து காலை 0930 மணி அளவில் துவங்கி எழுச்சியாக நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டம் மாலை 0645 மணி அளவில் மிக சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
மத்திய சங்க/ மாநில சங்க துணைத் தலைவர் தோழர். எஸ். மோகன்தாஸ் அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக அகில இந்திய துணைப் பொதுச் செயலாளர் தோழர். R. முரளிதரன் நாயர் சங்கக்கொடியை விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். பின்னர் தியாகிகளின் ஸ்தூபிக்கு மலர் அஞ்சலி செய்யப்பட்டது. அஞ்சலி தீர்மானத்தை மாநில துணைச் செயலர் தோழர்.L. பரமேஸ்வரன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். செயற்குழுவிற்கான ஏற்பாடுகளை செய்த மதுரை மாவட்டம் வரவேற்புக்குழு சார்பில் மாவட்டச் செயலர் தோழர். S. செல்வின் சத்தியராஜ் வரவேற்புரை ஆற்றினார் . கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஏற்பட்ட மின்தடையை சரிசெய்ய விரைவாக செயல்பட்டு தோழர். S. செல்வின் சத்தியராஜ் மாற்று ஏற்பாடு செய்தது பாராட்டிற்குரியது.
மாநில சங்க துணைத் தலைவர் தோழர். எஸ். மோகன்தாஸ் தலையுரையுடன் சிறப்புரையும் ஆற்றினார். மாநிலச் செயலர் தோழர். ஆர். ராஜசேகர் நிகழ்ச்சி நிரலை வாசித்து ஒப்புதல் பெற்றதுடன் மாநிலச் சங்கத்தின் சார்பில் வரவேற்புரை செய்ததோடு செயல்பாட்டு அறிக்கையை முன்வைத்து உரையாற்றினார். மாநிலப் பொருளாளர் தோழர். எஸ். நடராஜா நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து உரையாற்றினார்.
53 செயற்குழு உறுப்பினர்களில் 45 பேர் உட்பட 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட சிறப்பு கூட்டமாக மாநில செயற்குழு நடந்து முடிந்துள்ளது. விரிவான விவாதங்கள் நடைபெற்றன. 21 பேர் விவாதத்தில் பங்கேற்றார்கள். மாநிலச் செயலரின் செயல்பாட்டு அறிக்கையும் பொருளாளர் நிதிநிலை அறிக்கையும் விவாதத்துக்கு பிறகு ஏக மனதாக ஏற்கப்பட்டது.
அகில இந்திய துணைப் பொதுச் செயலாளர் தோழர் முரளிதரன் நாயர் துவக்க உரை வழங்கினார். தோழர் P ராஜு BSNLEU மாநிலச் செயலாளர் வாழ்த்துரை வழங்கினார். தோழர் அம்புஜவல்லி மத்திய சங்க துணை ப்பொருளாளர் சிறப்புரை வழங்க செயற்குழு சிறப்பாக நடைபெற்றது.
பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன. அனைத்தையும் விவரமாக பின்னர் தெரிவிக்கின்றோம். தோழர் எஸ் நடராஜா மாநில பொருளாளர் நன்றியுரை வழங்கினார்.
மதுரை மாவட்ட தோழர்கள் மதுரை மாவட்டச் செயலர் தோழர். S. செல்வின் சத்யராஜ் தலைமையில் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள். உணவு, தங்குமிடம், மண்டபம் நன்றாக இருந்தது. பழனி தோழர்களின் அன்பளிப்பாக பஞ்சாமிர்தத்தோடு அனைத்து தோழர்களையும் அனுப்பி வைத்தது சிறப்பு.
செயற்குழு உறுப்பினர்களுக்கான பயணப்படியை ஈரோடு மாவட்ட சங்கம் ஏற்றுக் கொண்டு வழங்கியது பாராட்டுக்குரியது
சிறப்பான ஏற்பாடுகளை செய்து நினைவில் வைத்து மறக்க முடியாத அளவு ஏற்பாடுகளை செய்திட்ட மதுரை தோழர்களுக்கு மாநில சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தோழமை வாழ்த்துக்களுடன் ஆர். ராஜசேகர் மாநில செயலாளர் 22 9 22
0 Comments